Friday, June 29, 2018

குழந்தை இயேசு இல்லம் - நிலக்கோட்டை

'ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்,
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்'. - தி.பா. 19:1

இறைவனின் வியத்தகு செயல்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டையில் உள்ள குழந்தை இயேசு இல்லம் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வில்லத்தில் 3 சகோதரிகள் தங்கி தங்களின் எளிய வாழ்வாலும், நம் சபையின் தனிவரத்திற்கும் உள்ளுயிருக்கும் சான்று பகரும் விதத்திலும் நற்செய்தி மற்றும் பங்குப்பணி ஆற்றுவார்கள். 
29.06.2018 இன்று நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். இந்நிகழ்வானது, நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வில்லத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிளை இல்லங்களிலிருந்து அமலவைச் சகோதரிகளும், நம் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய முன்னாள் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆக்னஸ் சேவியர் அவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வை இரட்டிப்பாக்கினார்கள். வந்திருந்த சகோதரிகள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டு இவ்வில்லம் இறையாசீரால் நிரப்பப்பட செபித்தனர். 



Sunday, June 24, 2018

'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களோ 
புதிய ஆற்றல் பெறுவீர்கள்'.
                                                                                                                    - எசா. 40:31
ஒவ்வொரு ஆறுமாதத்திலும் புதிய திசுக்கள் வளர்ந்து உடலில் வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. தினமும் புதுப்பிறப்பு அடைவது மனித மனம். நேற்றைய முடிவுகள் இன்று திருப்பிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகின்றன. தனிமனித வாழ்வில், குழும வாழ்வில், திருச்சபையில், அருள் வாழ்வில் என ஒவ்வொன்றிலும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பது துறவியரின் இலக்கும், கனவும். வளர்ச்சியும் தளர்ச்சியும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் தனது உள்ளத்து உயர் ஆற்றலால், அர்ப்பண வாழ்வால், பணிவாழ்வால் தளர்ச்சிக்கு பிரியாவிடை கொடுத்து வளர்ச்சியை வரவேற்பது பாராட்டிற்குரியது. 

இறைத்துணையோடு பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து சகோதரிகளையும், வழிநடத்திய அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்களையும் நம் மதுரை மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி மற்றும் மாநிலதுணைத்தலைவி அருட்சகோதரி பிரிஜிட் அவர்கள் வரவேற்றார்கள். சகோதரிகள் இன்னும் பணிவாழ்வில் முன்னோக்கிச் செல்ல கடந்து வந்த தடைகளின் வழியாக அனுபவத்தைப் பெற்று, நிகழ்காலத்தின் சவால்களோடு, எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் தீட்டினர் மதுரை மாநில பணிக்குழு உறுப்பினர் சகோதரிகள். தீட்டப்பட்ட திட்டங்கள் பொதுவில் வாசித்து, கலந்தாலோசிக்கப்பட்டு முடிவில் இந்த ஆண்டிற்கான (2018-2019) செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ந்து இனிதே விடைபெற்றனர்.

Friday, June 22, 2018

பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம்



'நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே 
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது'.
(யோவா 15:8)

மிகுந்த கனிதந்து இறைவனுக்கு சான்று பகர்ந்திட, அமலவைச் சகோதரிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை பணிக்குழுக்களின் வழியாக செயல்படுத்துகிறார்கள். உருவாக்கம், இறையழைத்தல், நற்செய்திப்பணி, கலை மற்றும் பண்பாடு, கல்விப்பணி, பல்சமய உரையாடல், மருத்துவப்பணி, சமூகப்பணி, பொருளாதாரம் போன்ற பணிக்குழுக்களில் உறுப்பினராக உள்ளனர். இவர்களுக்கென்று ஒவ்வொரு ஆண்டும் செயல்திட்டக் கூட்டம் மாநில இல்லத்தில் நடைபெறும். 

இந்த ஆண்டிற்கான (2018 - 2019) பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் மதுரை மாநில இல்லத்தில் 24.06.2018 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. நமது மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி அவர்கள் தலைமை ஏற்க, அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்கள் இக்கூட்டத்தை வழிநடத்துவார்கள்.   



தூயஆவியாரால் துறவற வாழ்வு

துறவிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும், அதோடு நமது துறவற வாழ்வும், தூய ஆவியாரால் நிரப்பப்படுகின்றது - இதை இம்மாத அகஇணைவில் தியானிப்போம்.

நம் ஒவ்வொருவருக்கும் உயிர் தந்து, உருவம் தந்து, தனது பணிக்கென அழைத்த இறைவனின் அருளுக்கும் கொடைகளுக்கும் நன்றி கூறி, இறைவனின் ஆவியானவர் நம்மில் செயலாற்றும் தருணங்களையும் நினைத்து இறைவனைப் போற்றுவோம்.

இறைவனின் ஆவியானவர் யார்? 

மூவொரு கடவுளின் (Holy Trinity) மூன்றாவது ஆளான தூய ஆவியானவர், உயிர் தருபவராக, உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துபவராக, இறைவனோடு நாம் இணைய துணைபுரிபவராக, நமக்கு ஆற்றல் தருபவராக, ஆறுதல் அளிப்பவராக, தமது கொடைகள், கனிகளால் நம்மை நிரப்புபவராக செயல்புரிகின்றார்.

உலகப்படைப்பில் ஆவியானவர்

'மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது'. (தொ.நூ. 1:2)

இருள்சூழ்ந்த, வெறுமையான, உருவமற்ற ஒரு மண்ணுலகு... ஒளிபெற, உருவம் பெற, தன்னை மீட்பவருக்காக காத்திருந்தது. (உரோ. 8:20-23) புனித பவுல் இதை நமக்கு விளக்கி கூறுகின்றார். கடவுளின் ஆவியானவர் தந்தை மகனுடன் இணைந்து புதிய உலகைப் படைக்க, வானம், பூமி, நீர்த்திரள் என படைப்பனைத்தும் தனித்தனியாக பிரிந்து, இறைவனின் மாட்சியைப் பறைசாற்ற, நீரிலும், நிலத்திலும் புற்பூண்டுகள், மரங்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்கள் தோன்றி இறைப்புகழ் இசைக்க, கடவுள் விரும்பிய அழகிய உலகம் பிறந்தது.

இஸ்ராயேலரின் தலைவர்கள் இறைவாக்கினர்களில் இறைஆவியானவர்

ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, மோசே, யோசுவா, நீதீத்தலைவர்கள் கிதியோன், சாமுவேல் மற்றும் அரசர்கள் தாவீது, சாலமோன்... இவர்களின் மேல் ஆண்டவரின் ஆவி இருந்தது. இவர்கள் இஸ்ராயேலர்க்கு நீதித்தீர்ப்பு வழங்கினார்கள்.

இறைவாக்கினர்கள் ....

எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஒசேயா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீக்கா, நகூம், அபக்கூக், செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி.... இவர்களின் வாழ்வில் இறைவனின் ஆவியானவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இறைவனின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பவர்களாக, தங்களது போதனைக்கேற்ப சான்றுவாழ்வு வாழ்பவர்களாக, இவர்களை மாற்றினார்.

இயேசுவின் வாழ்வில் தூய ஆவியானவர்

தொ.நூ 3:15 (உன் வித்துக்கும், அவள் வித்துக்கும்) கூறுவதுபோல, இறைமகன் மீட்பராக அனுப்பப்படுவார் என தந்தை இறைவன் வெளிப்படுத்துகின்றார்.

லூக். 1:35 தூயஆவி உம்மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்! என்பதற்கு ஏற்ப விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவன் மனிதனாய் பிறக்க, மனிதரோடு வாழ, மனிதருக்கு மீட்பைத் தர இறைஆவியானவர் தனது வல்லமையை பொழிந்து இயேசுவோடு பிரசன்னமாயிருக்கிறார்.

இறைமகன் இயேசுவின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் இறைஆவியானவரின் உடனிருப்பை செயல்பாடுகளை நாம் உணர இயலும். லூக். 2:49 (நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்). சிறுவன் இயேசு, தனது 12 வயதிலேயே தன் பணியின் நோக்கத்தை உணரச் செய்கின்றார். லூக் 3:22 (தூயஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது). இயேசுவின் திருமுழுக்கின் போது, இயேசு கடவுளின் மகன் என தூயஆவி சான்று பகர்கின்றார். லூக் 4:14 (இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராகக் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்). லூக் 4:18  (ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது) இயேசுவின் பணித் தொடக்கத்தில் ஆவியானவரின் அருள் பொழிவினை நாம் காண்கின்றோம்.

இயேசு நோயாளிகளை குணமாக்கிய போதும், இறந்தோரை உயிர்பித்த போதும், இறைத்தந்தையின் அன்பை உவமைகளால் எடுத்துரைத்த போதும், இறையரசை அறிவித்த போதும் இறைஆவியானவர் வல்லமையுள்ளவராய் செயல்பட்டார். லூக். 9:34,35 (ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது.) இயேசுவின் மறுரூபத்தின் போதும், இது தெளிவாக்கப்படுகிறது. இயேசு தனது பாடுகள் இறப்பின் மூலம் உலக மக்களை மீட்கும் அலுவலில் தூய ஆவியானவர் துணைநிற்கிறார். இயேசு உயிர்த்து, விண்ணகம் சென்ற பின், தூயஆவியானவர் திருத்தூதர்களை வழிநடத்தி, திருச்சபையை பலப்படுத்துகிறார்.

அன்னைமரியாள் வாழ்வில் தூய ஆவியானவர்

தொ.நூ. 3:15 'அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும்' மீட்பரின் தாய் அன்னைமரியாள் என்று தந்தை இறைவன் எடுத்துரைக்கின்றார். அன்னை மரியாள் படைப்பின் தொடக்கத்திலேயே இறைஆவியானவரின் அருளால் நிரப்பப்பட்டு, பாதுகாக்கப்படுகிறார்.

எசா. 7:14 'கன்னி கருவுற்று, ஓர் ஆண்மகனை பெற்றெடுப்பார்! என்று இறைவாக்கினரும், முன்னுரைக்கின்றார்.

லூக். 1:28-33 'அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்';. தூய ஆவியின் வல்லமையால் மீட்பர் பிறக்கப்போகும் செய்தியை அன்னைமரியாளிடம் எடுத்துரைக்கின்றார். இறைதிருவுளத்தை நிறைவேற்றும் அன்னையை இங்கு நாம் காண்கின்றோம்.

லூக். 8:21 'இறைவாhர்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'  இறைஆவியானவரால் நிரப்பப்பட்ட அன்னைமரியாள் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்தார்கள்;;;;;.

யோவா. 19:25-27. தன் மகனின் சாவில், துன்பத்தில் பங்கேற்ற அன்னைமரியாள் மீட்பு அலுவலில் துணையாய் இருக்கின்றாள்.

திப. 1:14 திருத்தூதர்களுடன் அன்னைமரியாளும் பரிசுத்த ஆவியின் வருகைக்காக காத்திருந்தாள். பரிசுத்த ஆவியை பெற்றபின் திருத்தூதர்கள் தங்களது பணியைச் செய்ய அன்னைமரியாள் உறுதுணையாய் இருந்தாள்.

திருத்தூதர்களின் வாழ்வில் இறைஆவியானவர்

தி.ப 1:8 (தூயஆவி உங்களிடம் வரும்போது, நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்.) உயிர்த்த இயேசு திருத்தூதர்களுக்கு கூறியபடியே திருத்தூதர்கள் இயேசுவுக்காக உலகெங்கும் சான்று பகர தூய ஆவியானவர் துணையாக இருந்தார். இயேசுவுக்காக திருத்தூதர்கள் தங்களது உயிரை இழக்கவும் தேவையான பலமும் சக்தியும் தந்து வழிநடத்தினார்.

துறவிகளாகிய நமது வாழ்வில் தூய ஆவியானவர்

நாம் கடவுளின் பிள்ளைகளாய் வாழ நமது திருமுழுக்கின் மூலம் அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளை அப்பா தந்தையே என அழைக்க தூய ஆவியானவரே, நாம் கடவுளின் பிள்ளைகள் என சான்று பகர்கின்றார். (உரோ. 8:15,16)

மேலும் உறுதிபூசுதல், ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி - திவ்ய நற்கருணை மற்றும் அருட்சாதனங்களைநாம் பெற்றுக் கொள்ளும்போது, தூய ஆவியானவர் நம்மீது ஆற்றலாய் பொழியப்படுகின்றார்.

இறைஅழைத்தலை நாம் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் தாராளமனதையும் இறைநம்பிக்கையையும் தந்து, துறவற வாழ்விற்கு நம்மை அழைத்து வந்தவர் இறைஆவியானவர். 'எளிமை அன்பு வழியில் எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து வாழவும், கிறிஸ்துவின் மறையுடலை கட்டியெழுப்பி வாழவும், இத்தனிவரத்தின் மூலம், நம் சபையை முழுமையாக ஆட்கொண்டவர் ஆவியானவர்.

குழு வாழ்வில், நம் சகோதரிகளின் அன்புறவின் மூலம் நாம் மேற்கொள்ளும் பணிகள் அணைத்தையும் புனிதமாக்குபவர் தூய ஆவியானவர். நமது பணிகளின் இலக்கு மக்களை பண்படுத்தி. கடவுளின் பிள்ளைகளாக வாழவைக்க, நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும், தமது தெய்வீகக் கொடைகளால் நிரப்புபவர் ஆவியானவர்

தூயஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம். (கலா. 5:25)

சுய ஆய்விற்கான வினாக்கள்

1) நமது தனிப்பட்ட வாழ்வில் தூய ஆவியானவரின் பிரசன்னத்தையும், அவரின் வழி நடத்துதல்களையும் நாம் உணர்ந்த நேரங்கள்.... நிகழ்வுகள் எவை?
2) குழுமவாழ்வில், நமது சகோதரிகளுடன் நாம் காட்டிய அன்புறவில், தூய ஆவியானவரின் அருட்பொழிவை நாம் அனுபவித்து உள்ளோமா?
3) நமது பணிகளில், தூய ஆவியானவரின் துணைகொண்டு, நாம் பெற்றுள்ள வெற்றிகள் எவை? எவை?
4) நமது பலவீனங்களிலிருந்து நாம் விடுபட, நமக்கு தீமை செய்தோரை மன்னிக்க, தூய ஆவியாரின் துணையை நாடுகின்றோம்?
5) தூய ஆவியானவரால் நாம் நிரப்பப்பட்டவர்களாய் வாழும் போது எத்தகைய கனிகளை, கொடைகளை, கடவுளுக்கும், பிறருக்கும் கொடுக்கின்றோம்?